Chapter 28

விளையாடுறியா ஹாசிணி? நானே இதுக்கு ஒத்துக்க மாட்டேன். சுந்தர் எப்படி ஒத்துக்குவாரு?

ஏன்?

சுந்தர் சொன்ன மாதிரி, அவன் நிழல் கூட உன் மேல விழுறதை, நாங்க யாருமே விரும்பலை!

நான் இந்த முடிவுக்கு ஒரு காரணம் இல்லை, பல காரணங்கள் இருக்கு. அத விட பெட்டரா, உங்ககிட்ட திட்டம் இருந்தா சொல்லுங்க, நான் கேட்டுக்குறேன்!

சரி, என்னென்ன காரணம்?

முதல்ல, என் லவ்வை, மாமா ஏத்துக்கவே மாட்டார். இது முழுக்க உணர்ச்சி வசப்பட்டோ இல்லை பரிதாபத்துலியோ எடுத்த முடிவாதான் பாப்பாரு. நாம எல்லாரும் வற்புறுத்துனா, வேற வழியில்லாம, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும், அதில கடமைதான் இருக்குமே ஒழிய, காதல் இருக்காது.

நான், மாமாவை லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுனால, அவரும் கடமைக்காக இல்லாம, முழுசா லவ் பண்ணனும்னு விரும்புறேன். என் லவ்வைச் சொல்ல, நான் எதுக்கும் தயார்ன்னு காட்ட இது கரெக்ட்டா இருக்கும்ன்னு நம்புறேன்…

ஏதோ சொல்ல வந்தவனை, இடைமறித்த ஹாசிணி, நான் முழுசா சொல்லிடுறேண்ணா. அப்புறமா சொல்லுங்க.

ரெண்டாவது, நம்ம எல்லார் வாழ்க்கைலியும் விளையாண்ட விவேக்கை, அவ்ளோ ஈசியா விட்டுட எனக்கு விருப்பமில்லை. நீங்க அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறீங்கங்கிறதை, நீங்க முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, துரோகத்தோட வலி என்னான்னு, ஒரு பொண்ணா, அவனுக்கு காட்டனும்! எதெதையெல்லாம் செய்வேன்னு பெருசா பேசியிருக்கானோ, அதையெல்லாம் அவனை செய்ய வைக்கனும். பிசிக்கல் தண்டனையை நீங்க கொடுங்க. சைக்காலஜிக்கல் தண்டனையை, நானும், மாமாவும் கொடுக்குறோம்!

ஹாசிணி இதைச் சொல்லும் போது, அவள் முகத்தில் தெரிந்த கடினமும், தீவிரமும், அவளது உறுதியைச் சொல்லியது.

மூணாவது, ஒட்டு மொத்தமா, நமக்கு நடந்த இந்த அசிங்கம், வெளிய எல்லாருக்கும் தெரியறதை, நான் விரும்பலை. நாளைக்கு என் பையனுக்கோ, உங்க குழந்தைகளுக்கோ இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சு, இதுனால ஏன் மன உளைச்சல் வரனும்?

மதுசூதனன் தலையிடவில்லை என்றாலும், ஹாசிணி பேச்சு வாக்கில், என் பையன் என்று சுந்தரின் குழந்தையைச் சொன்னதை கவனித்தான். அது, அவள் எந்தளவு மனதளவில் சுந்தரோடு ஒன்றி விட்டாள் என்பதை அவனுக்குச் சொன்னது!

விவேக்கைத் தண்டிக்கனும், ஆனா விஷயம் வெளியத் தெரியாம நடக்கனும்ன்னா, அவன், நம்ம கண் பார்வைல இருக்கனும். நகரவும் முடியாம, இதுக்குள்ள இருக்கவும் முடியாம தடுமாறனும்ன்னா, இதுதான் வழி. இல்லாட்டி, அவனை டார்கெட் பண்றது, கொஞ்சம் டவுட்டு வந்தாலும், அவன் எங்கியாவுது தப்பிச்சுப் போயிடுவான். நாம என்ன ப்ரஃபசனல் ரவுடியா, இதையே தொழிலா பண்ண? அவனுக்குதான் வேற வேலை வெட்டி எதுவும் இல்லைன்னா, நமக்குமா? அவனை கைக்குள்ள வெச்சிருந்து அடிக்கனும்ன்னா இதுதான் பெஸ்ட் வழி.

நாலாவது, மாமா அக்காவை டைவர்ஸ் பண்ணிட்டு, என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னா, இத்தனை நாளா, எங்களுக்குள்ள இருந்த நட்பை எல்லாரும் கொச்சையா பாப்பாங்க. நான் அப்பவே நினைச்சேன்னு யாராச்சும் சொல்லலாம்.

மாமா மேல இப்ப இருக்கிற லவ் எவ்ளோ ஸ்பெஷலோ, அதை விட ஸ்பெஷல் எங்களுக்குள்ள இதுவரை இருந்த நட்பும், அன்பும். எக்காரணம் கொண்டும், அதுக்கு ஒரு அவப்பெயர் வர்றதை நான் விரும்பலை. அதுக்கு பதிலா, நான் என் லவ்வையே தியாகம் பண்ணிடுவேன்.

ஹாசிணி சொன்ன காரணங்களைக் கேட்டு, அதில் தெரிந்த அவளது ஆழமான சிந்தனையையும், தர்க்கத்தையும் கண்டு வியந்து கொண்டிருந்த மதுசூதனன், கடைசியாக சொன்ன விஷயத்தில் இன்னும் வியந்தான். காதலைக் கூட தியாகம் செய்யத் தயார் என்று சொன்ன போது, சுந்தர் ரொம்ப லக்கிதான், இப்படி ஒரு காதலைப் பெறுவதற்க்கு என்று நினைத்தான்.

விளையாட்டுத்தனமாக பேசுவது போலிருந்தாலும், அனைத்தையும் யோசித்தே பேசுகிறாள் என்பதால் கனிவாகவே கேட்டான்.

எல்லாம் ஓகே ஹாசிணி! உங்கக்காவை டைவர்ஸ் பண்ணிட்டு, உன்னைக் கல்யாணம் பண்ணாலே தப்பா பேசுறவங்க, நீயும் ஒரு கல்யாணம் பண்ண பின்னாடி, ரெண்டு டைவர்ஸ் நடந்து, ஒண்ணு சேந்தா, இன்னும் தப்பா பேச மாட்டாங்களா?

என் ப்ளான் படி நடந்தா பேச மாட்டாங்க. அதிக பட்சம், ரெண்டு பேருக்கும் சரியான வாழ்க்கை அமையலை, அதுனால ஒண்ணு சேந்துட்டாங்கன்னு பேசலாம். ஆனா, அந்தப் பேச்சும் வராத அளவுக்கு ப்ளான் பண்றது ஒண்ணும் பெரிய விஷயமில்லை.

அவளது துணிச்சலையும், நம்பிக்கையையும் கண்டவன், வியந்த படியே சொன்னான்.

எல்லாம் ஓகே, ஹாசிணி, ஆனா, நீ விவேக்கையே கல்யாணம் பண்ணி, அவன் கூடவே கொஞ்ச நாள் இருப்ப அப்டீன்னா, அ… அதுல என்னென்ன சிக்கல் இருக்குன்னு தெரியுமில்ல? உன் ப்ளான் கொஞ்சம் சொதப்புனாலும், உன் வாழ்க்கை சிக்கலாயுடும். அதான் யோசனையா இருக்கு.

அதுதாண்ணா, அவனுக்கு கொடுக்கப் போற சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட். அவன் கையாலியே, மாமாவுக்காக உழைக்க வைச்சு, துரோகத்தோட வலியைக் கொடுக்கனும், இன்னும் பச்சையா சொல்லனும்ன்னா, அடுத்தவங்க மனைவியை அசிங்கப்படுத்துனவனை, சொந்த மனைவிகிட்ட ஒரு மண்ணும் செய்ய முடியாம நிக்க வைக்கனும். அவன் திமிரா பேசுனதுக்கெல்லாம் காரணம், அவனுக்கு ஒரு மண்ணும் தெரியாத பலவீனம், அந்த பலவீனத்தை மறைக்க இப்டி பேசிட்டு திரிஞ்சான்னு அவனுக்கு மட்டுமில்லாம, அவன் பின்னாடி போன எங்கக்கா மாதிரி ஆளுங்களுக்கும் காமிக்கனும்!

அவன் திமிரை எல்லாம் அடிச்ச பின்னாடி, நீங்க அவனை அடிக்கிறப்ப, ஒரு வலி வரும் அவனுக்கு! ஏன், நாம தப்பு பண்ணோம்ன்னு கதற வைக்கிற அடியா அது இருக்கும். பெரிய இவனாட்டம் பேசி திரிஞ்சவனுக்கு, ஒரு பிரச்சினைன்னா, தனக்காக ஓடி வர ஒருத்தரும் இல்லைங்கிற உண்மை அவனுக்கும், பத்து பொண்ணுங்க கூட இருக்கிறவன் ஆம்பிளை இல்லை, ஒரு பொண்ணோட நம்பிக்கையை கடைசி வரைக்கும் காப்பாத்துறவந்தான் ஆம்பிளைன்னு எங்க அக்கா உட்பட எல்லாருக்கும் தெரியனும்.

இதெல்லாம் நடக்கனும்ன்னா, நான் அவனைக் கல்யாணம் பண்ணனும். இல்ல, நான் சொன்ன எல்லாத்தையும், வேற முறைல நிறைவேத்தக் கூடிய திட்டம் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க, நான் கேக்குறேன்.

உண்மையாலுமே மதுசூதனனுக்குமே, அவள் சொன்னதை விட பெட்டர் ப்ளான் எதுவும் தோன்றவில்லை. இருந்தாலும் ராமைச் சந்தித்து ஹாசிணியின் கருத்தைச் சொன்னதும், அடுத்த நாள், அவனும் ஹாசிணியை நேரில் சந்தித்தான்.

உடனே உங்ககிட்ட சொல்லிட்டாரா இவரு?

ஹாசிணி, நீ எ… என்னதான் விளக்கம் சொன்னாலும், உன்னைப் பணயம் வைக்கிறதை எங்களால ஏத்துக்க முடியல. வேற வழியே இல்லையா?

நீங்க ஏன் இவ்ளோ தயங்குறீங்கன்னு சத்தியமா எனக்குப் புரியலை.

ம்ம்… உன்னை தங்கச்சின்னு வெறும் வார்த்தைக்குச் சொல்லலை. உண்மையாலுமே நினைச்சதுனாலத்தான் சொல்றோம். தங்கச்சியை பணயம் வைக்கிறதை எப்படி விரும்புவோம்?!

நானும் உங்களை உண்மையான அண்ணனாத்தான் நினைக்கிறேன். நீங்க இருக்கீங்கங்கிற தைரியத்துலதான், இந்தத் திட்டமே போட்டேன். நீங்க இருக்கீங்க. கூடவே மாமா இருக்கப் போறாரு. இன்னும் என்ன பயம்?

முழுதாக ஒப்புதல் இல்லாவிட்டாலும், அரைகுறை சம்மதம் சொன்னவர்கள் கேட்டார்கள்.

சரி, அடுத்து என்ன பண்ணப் போற?

வேற என்ன, மாமாகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண வேண்டியதுதான்!

நீயா?

பின்ன, மாமாவே வந்து ப்ரபோஸ் பண்ணப் போறாராக்கும்?

நாங்க வேணா சுந்தர்கிட்ட பேசிப் பாக்கட்டுமா?

வேணாம்! முதல்ல நான் லவ்வைச் சொல்றேன். நான் சொன்ன உடனே, என்னைத் திட்டிட்டு, நேரா உங்ககிட்டதான் வந்து புலம்புவாரு. நீங்க புதுசா கேக்குற மாதிரி கேட்டுட்டு, அவ சொன்னதுல என்ன தப்புன்னு எனக்காக பேசுங்க ஓகேயா? என்று கண் சிமிட்டி சிரித்த படியே சொன்னவளை, புன்னகையுடன் இருவரும் கை உயர்த்திக் காட்டினர்.

அவர்களிடம் விளையாட்டாய் சொன்னாலும், ஹாசிணி சுந்தரிடம் மிக சீரியசாய்தான் தன் லவ்வைச் சொன்னாள்.

அடுத்து உங்க ப்ளான் என்ன மாமா? ராம் அண்ணா சொன்ன மாதிரி, கல்யாணத்தைப் பத்தி யோசிச்சீங்களா?

பெருமூச்சு விட்டவன், யோசிக்கனும் ஹாசிணி! கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. முழுசா நம்பிக்கை வர மாட்டேங்குது.

உங்களுக்கு முழு நம்பிக்கை கொடுக்கக் கூடிய பொண்ணா இருந்தா, நீங்க ஓகே சொல்லுவீங்களா மாமா?

எனக்கு முழு நம்பிக்கை கொடுக்கக் கூடிய பொண்ணா? யாரந்…. என்று கேட்க ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான். சின்னக் கோபம், சந்தேகம் எல்லாம் கலந்து கூர்மையாக ஹாசிணியை பார்த்துச் சொன்னான்.

என்ன பரிதா…

பரிதாபப்பட்டு முடிவெடுத்தியா, லூசுத்தனமா பேசாதன்னுல்லாம் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட்டுடாதீங்க மாமா! அதே மாதிரி, தயவு செஞ்சு, இந்த எண்ணத்தோடதான் ஆரம்பத்துல இருந்து பழகுனியான்னும் கேட்டுடாதீங்க, ப்ளீஸ்!

அவள் வார்த்தைகளில் தெரிந்த உணர்வில், சற்று நிதானித்தவன், சிறிது நேரம் கழித்து கேட்டான்.

எதுனால இந்த முடிவு?

தலை குனிந்திருந்தவள், தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை அப்படியே சொன்னாள். துரோகம் தெரிந்த சமயத்தில் வருந்திய மனது, அவன் சுதாரித்து நிமிர்ந்த போது எப்படி பிரமித்தது, தன் அக்காவின் கணவனாக இனி இருக்கப் போவதில்லை என்று தெரிந்த பின் அவள் மனதில் ஏற்பட்ட மாற்றம், இன்னொருத்தியைக் கல்யாணம் செய்யச் சொல்லி ராம் கேட்ட போது எழுந்த பொசசிவ்னெஸ் கலந்த தவிப்பு என்று அனைத்தையும் சொன்னவள்,

இந்தக் கல்யாணம் உங்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும்கிறதுக்காக, இந்த முடிவெடுக்கல மாமா. உங்களை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு விரும்புறேன். அவ்ளோதான்.

ஹாசிணியின் தீர்க்கமான பேச்சினைக் கேட்டவனின் கோபம் குறைந்தாலும், அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருக்கிற குழப்பத்துல, இது வேறயா?

நீங்க இன்னமும் என்னை, ஹரிணியோட தங்கச்சியா பாக்குறீங்க. அதான் குழப்பம்! ஆனா, என்னால உங்ககிட்ட நடிக்க முடியாது மாமா! இத்தனை நாளா, இந்த எண்ணம் இல்லை. ஆனா, இப்ப மனசுல தோணுன பின்னாடி, உங்ககிட்ட மறைக்க விரும்பலை. உங்ககிட்ட சொல்லனும்ன்னு தோணுச்சு. சொல்லிட்டேன். நீங்க யோசிச்சு முடிவைச் சொல்லுங்க.

நீ என்னச் சொன்னாலும், என்னால, இதை ஏத்துக்க முடியும்ன்னு தோணலை ஹாசிணி! என்று சுந்தர் சொன்னாலும், அவனையறியாமல், அவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாள் ஹாசிணி!

அழகானவள், திறமையானவள், தன்னை முழுக்கப் புரிந்து கொள்பவள், தன் விருப்பங்களை அறிந்தவள், இலட்சியங்களுக்கு தோள் கொடுப்பவள் இப்படி பெருமைகளுக்குச் சொந்தக்காரி, தேடி வந்து காதலைச் சொன்னது, அவனையறியாமலேயே, அவனுக்கு ஒரு உற்சாகத்தைத் தந்தது. தன் மேல் அன்பு காட்ட, தனக்காக யாரும் இல்லையோ என்று தவித்தவனுக்கு, முழுக் காதலையும் காட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பாசிட்டிவ் மனநிலை.

இன்னொருவனுடனான கள்ளத் தொடர்பை மறைத்திருக்கிறாளே என்று வலித்த மனதுக்கு, உன்னுடனான காதலை என்னால் மறைக்க முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னது, மருந்தாய் இருந்தது.

ஹாசிணி எப்படி சுந்தரை, அக்கா கணவராக இல்லாமல் ஒரு ஆண்மகனாகப் பார்க்க ஆரம்பித்தாளோ, அதேபோல், அவளை மனைவியின் தங்கையாக இல்லாமல், ஒரு பேரழகியாக பார்க்க வைப்பதற்க்கு ஆரம்பப் புள்ளியாக அது அமைந்தது.

காதலைச் சொல்லி விட்டு அவள் மிக இயல்பாய் இருந்தாலும், இவன்தான் தடுமாறிக் கொண்டிருந்தான். மனம் தாங்காமல் ராம் மற்றும் மதுவிடம் சொன்ன போது, அவர்கள் புதிதாய் கேட்டு விட்டு,

ச்சே… இந்த எண்ணம் நமக்கு கூட வரலியே? ஹாசிணி மாதிரி ஒரு பொண்ணு உனக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பா என்று சொல்லியதில் இன்னும் குழம்பினான். ஆனால், இப்போதெல்லாம், இதுவரை அவன் கவனித்திராத ஹாசிணியின் அழகை கவனிக்க ஆரம்பித்திருந்தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால், அவளை சைட்டடிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது. மிக முக்கியமாய், மற்றவர்கள் எப்படி பேசுவார்கள் என்ற கவலை எழுந்தது.

சில நாட்கள் கழித்து அவள் விவேக்கை கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் சொன்னதாய், ஹரிணி சொன்ன போது கடும் அதிர்ச்சி அடைந்தான்.

உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சுல்ல என்று அவளைக் கோபமாகத் திட்டியவன், மதுசூதனனை சந்தித்த போது மனதளவில் சோர்ந்திருந்தான்.

நீண்ட நேரம் புலம்பியவனையே பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனன் மெதுவாய்ச் சொன்னார்.

நீங்க இல்லைன்னு சொன்னாலும், ஹாசிணியை லவ் பண்ன ஆரம்பிச்சுட்டீங்க சுந்தர்! ஏதோ தயக்கத்துல இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க! நீங்களே உங்க மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க!

நீங்க இல்லைன்னு சொன்னாலும், ஹாசிணியை லவ் பண்ன ஆரம்பிச்சுட்டீங்க சுந்தர்! ஏதோ தயக்கத்துல இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க! நீங்களே உங்க மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க!

நீங்க தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க டாக்டர். ஹாசிணி மேல இதுவரைக்கும் எனக்கு இருக்குறது வெறும் அன்புதான். காதல் இல்லை. ஆனா, இப்படியே வளந்துச்சுன்னா, நான் கண்டிப்பாக லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

நீயும் ஏன்யா குழப்புற? நீங்கள்லாம் நேராவே பேச மாட்டீங்களா?

நானும்ன்னா, வேற யாரு?

முதல்ல நீங்கச் சொல்லுங்க, அப்புறம் நான் சொல்லுறேன்.

ஹாசிணியை ஒரு தடவை அவங்க வீட்டு ஆட்கள் கூட நம்பாதப்பவே, அவ மேல நம்பிக்கை வெச்சேன் டாக்டர். அப்பருந்து, என் மேல அவளுக்கு ஒரு கூடுதல் அன்பு இருக்கும், அந்த அன்புதான், நல்ல சம்பளத்துல வேலை இருந்தும், எனக்கு சப்போர்ட்டா, என் ஆஃபிஸ்க்கு வர வெச்சுது. இப்பவும், அவங்க அக்கா பண்ணதுதான் தப்புன்னு, எனக்காக ஃபீல் பண்ண வெச்சுது.

ஹாசிணி மாதிரி ஒரு பொண்ணை லவ் பண்ணாம இருக்கவே முடியாது டாக்டர். நம்ம மேல கண்மூடித்தனமா அன்பை வெச்சு, நமக்காக எதையும் செய்யத் தயாரா இருக்குற, ஒரு அழகான பொண்ணை நீங்க எப்படி வெறுக்க முடியும்?

அதுனாலத்தான் சொன்னேன், இப்ப இருக்குற அன்பு எப்ப வேணாக் காதலா மாறலாம். ஹாசிணிக்கும் அப்டித்தானே. நேத்து வரைக்கும் அன்பு மட்டுந்தானே இருந்தது.

ஆனா, என் கவலையெல்லாம், நாளைக்கு இந்த உறவை யாராவது கொச்சைப் படுத்தலாம். என்னை விட, ஹாசிணியை அது ரொம்பக் கஷ்டப்படுத்தும். ஏன்னா, அவ என்னைக் காதலிறதை விட கூடுதல் முக்கியத்துவத்தை, அதுக்கு முன்னாடி இருந்த அன்புக்குதான் கொடுப்பா.

எல்லாத்தையும் விட, எனக்கு ஹாசிணி கிடைக்கிறது ஒரு வரம். ஆனா, அவளுக்கு ஏன் என்னை மாதிரி, ஏற்கனவே கல்யாணமான ஒருத்தன் கணவனா கிடைக்கனும். எனக்கென்னமோ, அவளை கைட் பண்றேங்கிற பேர்ல, என்னைத் தாண்டி பெருசா சிந்திக்காத ஒரு வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திட்டேனோன்னு வருத்தமா இருக்கு டாக்டர்.

கேட்டுக் கொண்டிருந்த மதுசூதனனே பிரமித்தார். சுந்தர், ஹாசிணி, எதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பாள் என்று சரியாக கணித்திருந்ததும், வலிய வருவதை, அவளுடைய நலனுக்காக தள்ளி நின்று யோசிப்பதும் சுந்தரின் மேலிருந்த மரியாதையையும் அதிகரிக்கச் செய்தது. இந்த ஜோடி இணைய ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தவன்,

உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லனும் சுந்தர்.

சொல்லுங்க டாக்டர்.

ஹாசிணி உங்களை லவ் பண்றாங்கிறதை, நீங்க சொல்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும்!

என்ன சொல்றீங்க?

எஸ்… ஆக்சுவலி, எனக்கே டவுட்டு வந்துதான் ஹாசிணிகிட்ட நானே போய் கேட்டேன். அப்ப ஹாசிணி என்ன சொன்னா தெரியுமா என்று அன்று ஹாசிணிக்கும், டாக்டருக்கும் இடையே நடந்த உரையாடல் முழுதையும் சொன்னவன், விவேக்கை திருமணம் செய்ய முடிவெடுத்த காரணத்தின் பிண்ணனியையும் சொன்னான்.

இதை உங்ககிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன் சுந்தர். ஆனா, சம்டைம்ஸ், எதிர்காலம், சமூகத்துக்காக, ரொம்ப அதிகப்படியா யோசிச்சு, அந்த நேரத்து சந்தோஷத்தையும், நமக்கான வாழ்க்கையையும் இழந்துடுவோம். அது உங்களுக்கு நடக்கக் கூடாதுன்னுதான் இதையும் சொல்றேன்.

ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை இருக்கு, சரியா புரிஞ்சிக்கிறீங்க, துணையா இருக்கீங்க இதுக்கு மேல என்ன வேணும்? அதுவும் ஹாசிணி, விவேக்கும் ஹரிணியும் தப்பு பண்ணதுக்கு, என் பையன் ஏன் கஷ்டப்படனும் கேட்டப்ப நான் அசந்துட்டேன். எனக்கென்னமோ, தன்னோட அக்காவோட குழந்தைங்கிறதுக்காக அவ அப்படிச் சொல்லலை. உங்கக் குழந்தைங்கிறதுனாலத்தான் அப்டி சொல்லியிருக்கா. அப்டி ஒருத்தி கிடைக்குறது ரொம்ப ரேர் சுந்தர். தேவைக்கு அதிகமா யோசிச்சு நல்ல சந்தோஷத்தை இழந்துடாதீங்க, அவ்ளோதான் சொல்லுவேன்… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது.

டாக்டர் சொல்லச் சொல்ல சுந்தரே பிரமித்திருந்தான். ஹாசிணி காதல் உருவானதை விளக்கியிருந்தாலும், டாக்டர் சொன்ன அளவுக்கு விளக்கவில்லை. டாக்டர் நடந்ததை அப்படியே சொன்னதுமில்லாமல், அவருடைய கருத்தையும் சேர்த்தேச் சொன்னதும் சுந்தரை அசைத்திருந்தது. அவனுக்கே, ஓவரா யோசிக்கிறோமா, வழிய வர்ற ஸ்ரீதேவியை வேணாம்ன்னு சொல்லிட்டு என்ன பண்ணப் போறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன், டாக்டர் கதவைத் திறந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த ஹாசிணியைக் கண்டு அதிர்ச்சியானான்.

ஹாசிணி?! நீ எப்டி இங்க?

ம்ம்ம்… நீங்க என்கிட்ட சண்டை போட்டுட்டு, இங்க வந்துதான் புலம்புவீங்கன்னு எனக்குத் தெரியும். அதான் உங்களுக்கும் முன்னாடியே இங்க வந்துட்டேன். அது மட்டுமில்லை, இவ்ளோ நேரம் நீங்க தண்ணி போடாமியே தண்ணி போட்ட மாதிரி உளறுனதை எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தேன்.

எ.. எப்டி?

ம்ம்ம்… நீங்க புலம்ப ஆரம்பிச்ச உடனே, எனக்கு சைலண்ட் மோடுல ஃபோன் பண்ணச் சொல்லி ஏற்கனவே சொல்லியிருந்தேன் என்றவள், டாக்டர் பக்கம் திரும்பி, நாம பேசுனதை இவர்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று அதட்டினாள். பின், டாக்டரின் ஃபோனை எடுத்து, ஆஃப் செய்து அவரிடம் கொடுத்தவள், நான் மாமாகிட்ட தனியா பேசிட்டு வர்றேண்ணா என்று அனுப்பியவள், திரும்பச் சுந்தரின் பக்கம் திரும்பி முறைத்தாள்.

இவ்வளவு நேரம் அதட்டியதில், முறைத்ததில் சுந்தருக்கும், டாக்டருக்கும் புன்னகைதான் இருந்தது. இப்போது திரும்ப தன்னை நோக்கி முறைக்கும் போது சுந்தரின் புன்னகை விரிந்தது. ஆனால் அவளது அடுத்த பேச்சு அவனை அதிர்ச்சியடைய வைத்தது.

யோவ் மாமா…

யோவா?

ஆமாய்யா?

இப்டி ஒரு ஃபிகரு, வழிய வந்து உங்களுக்கு லவ் யு சொல்றேன், என்னமோ உங்களைக் கட்டிக்க லைன்ல நிக்குற மாதிரி என்னை வேணாம்ன்னு சொல்ற? என்னை வேணாம் சொல்லிட்டா, நீங்க நல்லவன்னு கோவிலா கட்டப் போறாங்க?

என் ரேஞ்சு என்ன, காலேஜ்ல எத்தனை பேரு எனக்கு ரூட்டு விட்டாங்க, எல்லாத்தையும் விட்டுட்டு உம்மைத் தேடி வந்து லவ் பண்றேன்னு சொன்னா, ஃபீல் பண்ணிட்டிருக்கீங்க. ஏதோ போனாப் போகுதுன்னு மாமாவாச்சேன்னு டைம் கொடுத்தேன். இனியும் யோசிச்சுகிட்டு இருந்தீங்க…

என்ன பண்ணுவ?

ம்ம்.. என் ஸ்பீடு உங்களுக்குத் தெரியாது. அப்புறம்.. நான் உங்களுக்குத் தாலி கட்டிட்…

பேசிக் கொண்டிருந்தவளை அப்படியே இழுத்து அவள் உதடுகளில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் சுந்தர். ஏற்கனவே ஓவரா யோசிக்கிறோம் என்றிருந்தவனை சரியாகப் புரிந்து, அவனுக்கும் முன்பே வந்து காத்திருந்த மெனக்கெடல்களிலேயே காதலில் விழுந்திருந்தவன், அவளது பேச்சையும், குழந்தைத்தனமும், அதிரடியும், உரிமையும், காதலும் கலந்த பேச்சில் இன்னும் உறுதியாகி, அவள் வழியிலேயே சென்று அதிரடியாய் தன் காதலைச் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

என்னதான் நக்காலய் பேசினாலும், தனக்கு கிடைக்கும் முதல் முத்தம், இதழ் வழி உயிர் வரை உறிஞ்சும் முத்தத்தை திடீரென்று சுந்தர் கொடுக்கும் அதிரடியில் மயங்கி நின்றாள். சுந்தர் மிக நிதானம், யோசித்துதான் செய்வான் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி முன்னேறிய போது அதில் கிடைத்த த்ரில்லில், அவள் சிலிர்த்தாள். நீண்ட நேரம் முத்தமிட்டு அவளை விடுவித்தாலும், அவள் இன்னும் கிறக்கத்தில்தான் இருந்தாள்.

தான் விரும்பிய காதல் அவளுக்கு கைகூடுகிறது, அந்தக் காதலை சுந்தர் அங்கீகரித்து விட்டான் என்ற தித்திப்புடன், முத்தத்தின் இனிப்பும் சேர, அதில் ரொம்பவே மயங்கிக் கிடந்தாள்.

ஏய் வெடிப் பட்டாசு, இப்ப தாலி கட்டுறியா, இல்ல கட்டிக்கிறியா?

க… கட்டிக்கிறேன்!

அப்ப கட்டிக்கோ என்று கையை விரித்து நின்றான்..

நான் அந்தக் கட்டிக்கோவைச் சொல்லலை! தா… தாலியைச் சொன்னேன்!

நான் அந்தத் தாலியை உனக்கு கட்டனும்ன்னா, நீ என்னை வந்து இப்ப கட்டிக்கனும்!

ஆங்..

கட்டிகிட்டாதான் கட்டிக்குவேன்! இல்ல..

இல்லன்னா?

வேற ஒருத்தியை கட்டிக்குவேன், ஓகேயா?

எவ அவ வர்றான்னு பாக்குறேன் என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அப்ப வந்து கட்டிக்கோ?!

பட்டாசாய் வெடித்துக் கொண்டிருந்தவள், வெட்கத்துடன் தயங்கித் தயங்கி வந்து அவனை இலேசாய் கட்டிக் கொண்டாள்.

நீ என்னை லவ் பண்றியா இல்லை?

இதென்ன கேள்வி?

அப்புறம், உன் லவ்வரை இப்படித்தான் கட்டிப்பியா? உனக்கு சரியா லவ் பண்ணவேத் தெரியலியே?!

யோவ் மாமா, இத்தனை நாளா நல்லவனாட்டம் நடிச்சு ஊரை ஏமாத்தியிருக்கியா? செம கேடியா இருக்க?

இப்டி ஒரு லேடியை லவ் பண்ணனும்ன்னா, நான் கேடியாத்தானே மாறனும் என்று கண் சிமிட்டியவன், கட்டிக்கோடி என்றான்.

இந்த முறை வெட்கங்களைத் துறந்து, ஆசையுடன், மகிழ்ச்சியுடன், புன்னகையுடன் அவன் மார்பில் சாய்ந்தவளை, அவனும் தழுவி நின்றான்.

அவன் மார்பில் முகம் புதைத்து நின்றவளின், தோள்களில் அவன் முகம் புதைத்து நிற்க, நீண்ட நேரம் மெய் மறந்து நின்றார்கள். பின் அவள் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தான்.

தாங்க்ஸ்டி!

எதுக்கு?

எல்லாத்துக்கும்!

ச்சீ போ மாமா… தாங்க்ஸ்லாம் சொல்லிட்டு!

இனி இப்டி வாய்ல சொல்ல மாட்டேன்!

பின்ன எப்டி சொல்லுவீங்க?

அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாம்பிள் காட்டுனேனே?!

ச்சீ… இத்தனை நாளா இந்த ரொமான்ஸ் மொகத்தை எங்க மறைச்சி வெச்சிருந்தீங்க?

எல்லாத்துகிட்டயுமா இதைக் காட்ட முடியும்? பொண்டாட்டிகிட்ட மட்டுந்தான் காட்ட முடியும்! நீ ரொம்ப விரும்பிக் கேக்குறதுனால, எல்லார்கிட்டயும் காட்டுறேன்! ஓகேயா?

கொன்னுடுவேன்! கண்ணு இன்னொரு பொண்ணு பக்கம் போச்சு, திருகிடுவேன்!

ஹா ஹா… சரி, சீரியசா ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?

என்ன?

நம்மக் கல்யாணம் பண்ணிக்கலாம். விவேக் வேணாம். அவனைத் தனியா டீல் பண்ணிக்கலாம்!​
Next page: Chapter 29
Previous page: Chapter 27